Friday 21 September 2012

அரங்கமாநகருளானே

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம் என்னாம்
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே

வண்டினங்கள் இசை பாடும் சோலை. மயிலினங்கள் நடனமாடும் சோலை. மேகங்கள் தவழ்ந்து வரும் சோலை. குயிலினங்கள் கூவும் சோலை. தேவர்களின் தலைவனான அரங்கன் அமரும் சோலை. அழகிய சோலையாகிய அந்தத் திருவரங்கம் என்னும் பெரியவர்கள் மிக விரும்பி உண்ணும் உணவை இந்த சிறிய நாயேனுக்கும் நீங்கள் இடவேண்டும்.


கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே.

கங்கையை விடப் புனிதமான காவிரியின் நடுவில் எல்லாப் பக்கங்களிலும் நீர் பரந்து பாயும் பூஞ்சோலையாம் திருவரங்கம் தன்னுள் எங்கள் மாலவன் எங்கள் இறைவன் எங்களையுடைய ஈசன் கிடந்த திருக்கோலத்தைக் கண்ட பின் அதனை எப்படி மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே.

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமாநகருளானே

சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. சொந்த நிலம் என்று ஒன்று இல்லை. உன்னை விட்டு மற்றொருவர் உறவு என்று இல்லை. இந்த உலகத்தில் உன்னுடைய திருப்பாதங்கள் என்னும் வேரைப் பற்றினேன் பரமனே. கருநிற ஒளி வண்ணனே. கண்ணனே. கதறுகின்றேன். உன்னை விட்டால் வேறொரு களைகண் இல்லை. திருவரங்கமாநகருளானே.

No comments:

Post a Comment